இவரன்றோ நல்லாசிரியர்!
என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன். அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ., பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார். என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.
— களந்தை மைந்தன், நெல்லை.
No comments:
Post a Comment