Thursday, August 21, 2025

திருப்பு முனைகள் (தன்னம்பிக்கைத் தொடர்)

 


நேகமாக நாம் எல்லோரும், சிறுவயதில் கேட்டு, அல்லது படித்து அறிந்த ஒரு தகவல்:

மகாத்மா காந்தி, சின்னஞ்சிறுவனாக இருந்தபோது 'ஹரிச்சந்திரா' நாடகம் பார்த்தார். எப்போதும் பொய் சொல்லக்கூடாது, உண்மையே பேசவேண்டும் என்கிற கருத்து அவர் மனத்தில் பதிந்தது. அதன்பிறகு வாழ்நாள்முழுவதும், அந்த நம்பிக்கைதான் அவரை வழிநடத்தியது.

அன்றைய தினம், மோகன்தாஸ் காந்தி அந்த நாடகத்தைப் பார்க்கப் போகாமல், நண்பர்களுடன் விளையாடச் சென்றிருந்தால்? 'களைப்பாக இருக்கிறது' என்று வீட்டில் படுத்துத் தூங்கியிருந்தால்? நாம் ஒரு மகாத்மாவை இழந்திருக்கக்கூடிய அபாயம் நேர்ந்திருக்குமில்லையா?

மகாத்மா தொடங்கி, அரசியல், கலைத்துறை, விளையாட்டு, பிஸினஸ், இலக்கியம், அறிவியல் என்று பலதுறைச் சாதனையாளர்கள் யாருடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும், இதுபோன்ற ஒரு (அல்லது பல) திருப்புமுனை அவசியம் இருக்கும். ஒரு நாடகம், ஒரு முதுமை / மரணக் காட்சி, அரசியல் ஆர்வம், ஓர் ஓஸி கம்ப்யூட்டர், ஒரு குறும்பு, ஒரு பயணம், ஒரு தோல்வி, அப்பாவின் அறிவுரை, அம்மாவின் அன்பு, நண்பர்களின் அரவணைப்பு, அல்லது துரோகம், எதேச்சையாகத் தெருமுனையில் பார்த்த ஒரு சம்பவம், வாசித்த ஒரு புத்தகம், சந்தித்த மனிதர்கள் என்று பல சாதனையாளர்களின் வாழ்க்கைகளைத் திருப்புமுனைகள் தீர்மானித்திருக்கின்றன.

அந்த விநாடியில் அவர்களுடைய வாழ்க்கை திசை திரும்பியிருக்கும், அதன்பிறகு, வழக்கத்திலிருந்து மீறியவர்களாக அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு வெற்றியடைந்திருப்பார்கள். திரைப்படங்களில் மட்டுமில்லை, நிஜ வாழ்க்கைகளில்கூட, எதிர்பாராத 'டர்னிங் பாயின்ட்'களால்தான் சுவாரஸ்யம் சேர்கிறது.

இந்தத் திருப்புமுனைகளை, அப்போது அவர்கள் உடனடியாக அடையாளம் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பின்னர் சரித்திரம் அவர்களுடைய சாதனைக் கதையைத் திருப்பிப் பார்க்கும்போது, திருப்புமுனைகளின் முக்கியத்துவம் புரியவருகிறது.

நம் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட மன / சூழ்நிலை மாற்றங்கள் தென்படுகின்றன, அவற்றைச் சரியான நேரத்தில் புரிந்துகொண்டு, பயன்படுத்திக் கொண்டுவிடுவது சாமர்த்தியம். இந்த வரிசையில் வரும் வெற்றியாளர்களும், அவர்களுடைய 'திருப்புமுனை'களும் நமக்கு உதவுவார்கள்.

இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பல பிரபலங்கள், சாதனையாளர்கள், வெற்றிகரமான மனிதர்கள், நிறுவனங்கள், சமூகங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்பு முனைகள், அனைத்தும் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டவை. அந்தச் சம்பவங்களைக் கதை கலந்த வடிவில், சுவாரஸ்யம், சுய முன்னேற்றம், சரித்திரம் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தது மட்டுமே என் வேலை.

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவே, ஒரு சின்ன நூலிழை வித்தியாசம்தான்.

அந்த நூலிழைதான், இப்போது அந்த இளைஞரைக் கைவிட்டிருந்தது. வெற்றியை எட்டிப்பிடிக்கமுடியாமல், தவறிக் கீழே விழுந்துவிட்டார்.

தோற்றுப் போனவர்களைப் பார்த்து மற்றவர்கள் பரிதாபப்படுவார்கள். ஆனால் மாலைகள், பாராட்டுகளெல்லாம், ஜெயித்தவர்களுக்குதான், ‘நூலிழை வித்தியாசத்தில்தானே இவர் தோற்றுப் போனார்என்று லேசாக முதுகு தட்டி ஊக்கப்படுத்துகிறவர்கள்கூட யாரும் இல்லை.

டெஹ்ராடூன் மலை முகட்டில் நின்றுகொண்டு, கீழே தெரியும் ஏரியைப் பார்த்தார் அப்துல் கலாம். தோல்வி அவரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது.

அதுவும், சாதாரணத் தோல்வியா? ‘இந்த இன்டர்வ்யூவில் மொத்தம் எட்டுப் பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்என்று தெளிவாகச் சொல்லிவிட்டுதான் நேர்முகத் தேர்வைத் தொடங்கினார்கள். அந்த எட்டு இடங்களுக்கு, மொத்தம் இருபத்தைந்து பேர் மோதினார்கள்.

எங்கோ இந்தியாவின் தென்கோடிமுனை கிராமத்திலிருந்து, வடக்கே டெஹ்ராடூன்வரை இதற்காகவே பயணம் செய்து வந்திருந்தார் கலாம். எப்படியும் தனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்று ஓர் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அதற்கேற்ப, நேர்முகத் தேர்வும் கடினமாக இல்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் டாண்டாணென்று பதில் சொல்லிவிட்டார். இனிமேல், அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் கையில் வாங்கவேண்டியதுதான்.

மேகங்கள் இல்லாத நீல வானத்தை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டார் அப்துல் கலாம், ‘இன்னும் கொஞ்ச நாளில், நானும் விமானமேறி அங்கே வருவேன்

ஆனால், அவருடைய கனவு நெடுநேரம் நீடிக்கவில்லை. இன்டர்வ்யூவுக்கு வந்திருந்த இருபத்தைந்து பேரில், அவருக்கு ஒன்பதாவது இடம்தான் கிடைத்தது. அவர்களுக்கு வேண்டியது எட்டுப் பேர்தானே? ‘நீ தேவையில்லைஎன்று கலாமை நிராகரித்துவிட்டார்கள்.

தன்னுடைய இழப்பை நினைக்க நினைக்க, அவருக்கு வேதனையாக இருந்தது. இந்திய விமானப்படையில் பணிபுரியும் அபூர்வமான வாய்ப்பு, விரல்களுக்கு நடுவே தண்ணீர்போல் வழிந்து ஓடிவிட்டது.

சிறுவயதிலிருந்தே, அவருக்குப் பறக்கும் ஆசை அதிகம். விமானியாக உலகம் சுற்றலாம், தேச சேவைக்குத் தன்னுடைய பங்களிப்பைச் செய்யலாம் என்றுதான் இவ்வளவு தூரம் முயற்சி செய்திருந்தார்.

அத்தனையும், தோல்வி, படுதோல்வி. இன்டர்வ்யூவில் வெற்றியடைந்த எட்டுப் பேரும், விமானம் ஓட்டுவார்கள், ஆனால் நான்? இனிமேல், என் வாழ்க்கை என்னவாகப்போகிறது?

அப்துல் கலாமின் மனம்முழுக்கக் கேள்விகள் நிரம்பியிருந்தன, சுற்றிலும் பரந்து விரிந்திருக்கிற இயற்கை அழகைக்கூட அவரால் ரசிக்கமுடியவில்லை.

சரி, தோற்றுப்போய்விட்டோம். அதற்காக, இங்கேயே நின்றுகொண்டிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா?

ஒரு மனமாற்றத்துக்காக, பக்கத்திலிருந்த ரிஷிகேஷத்துக்குக் கிளம்பினார் கலாம். அங்கே கங்கை ஆற்றின் புனிதத்தில் குளித்துக் கரையேறியபோது, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

ஆனால், கேள்விகள் அவரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்தன. அற்புதமான ஒரு வாய்ப்பை, இப்படி அநியாயமாகக் கோட்டைவிட்டிருக்கிறேனே, அடுத்து என்ன? இன்னொரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா? எப்போது? எங்கே?

கேள்விகள், கவலைகளின் கனத்தைத் தாங்கமுடியாமல், தொடர்ந்து நடந்தார் அப்துல் கலாம். எதிரே ஒரு கட்டடம் தென்பட்டது, அருகே நடந்து கொண்டிருந்தவரிடம் விசாரித்தார், ‘இது என்ன இடம்?’

சுவாமி சிவானந்தா ஆசிரமம்

இனம் புரியாத ஓர் எதிர்பார்ப்புடன், அந்த ஆசிரமத்தினுள் நுழைந்தார் கலாம். அந்த விநாடியில், தன்னுடைய எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்பதுபோல் அவருக்கு உடல் சிலிர்த்தது.

சுவாமி சிவானந்தர், சுத்தமான வெள்ளை ஆடையில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும், ஓர் அழகான அமைதி குடிகொண்டிருந்தது. மௌனமாக அவரெதிரே போய் நின்றார் அப்துல் கலாம்.

வா இளைஞனே, ஏன் உன் முகம் வாடியிருக்கிறது? என்ன பிரச்னை?’

அதற்காகவே காத்திருந்ததுபோல், அவரிடம் தன்னுடைய மனக்குறையையெல்லாம் கொட்டினார் அப்துல் கலாம், ‘சுவாமி, இந்திய விமானப்படையில் சேரவேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன், இப்போது, அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது, அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை

சுவாமி சிவானந்தர் அமைதி குலையாமல் புன்னகைத்தார், ‘கலாம், வாழ்க்கை உன்னை எந்தப் பாதையில் கொண்டுசெல்கிறதோ, அதோடு சண்டை போடாதே, மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்

புரியவில்லை சுவாமி

நீ விமானியாக வேண்டும் என்று விதிக்கப்படவில்லை, இந்தத் தோல்வி, உன்னுடைய குற்றம் இல்லை, ஏற்கெனவே எழுதிவைக்கப்பட்ட விதி

அப்படியானால், நான் என்னவாகப் போகிறேன்?’

அது நமக்குத் தெரியாது, ஆனால், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதுஎன்றார் சுவாமி சிவானந்தர், ‘இந்தத் தோல்வியை மறந்துவிடு, உன்னுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தேடு, கடவுளின் எண்ணப்படி, எல்லாம் நல்லபடியாக நடக்கும்

மீண்டும் பழைய நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினார் அப்துல் கலாம், தன்னால் விமானியாக முடியவில்லையே என்கிற வருத்தம், ஏமாற்றம் அவருக்கு இன்னும் மிச்சமிருந்தது. ஆனால் அதேசமயம், தன்னாலும் ஜெயித்துவிடமுடியும் என்கிற உறுதியான எண்ணம் தோன்றியிருந்தது.

உடனடியாக, டெல்லி கிளம்பினார் அவர். அங்கே, மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓர் ஆராய்ச்சிப் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது.

அந்தத் திருப்புமுனைதான், இன்றைக்கு நாம் நன்றாக அறிந்த பாரதரத்னா டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமை உருவாக்கியது!

ஒருவேளை, டெஹ்ராடூனில் அவருக்கு விமானப்படை வேலை கிடைத்திருந்தால், அப்துல் கலாம் சின்ன வயதிலிருந்து ஆசைப்பட்டதுபோல் அவர் வானத்தை அளந்திருப்பார், விமானத்தில் உலகம் சுற்றி வந்து மகிழ்ந்திருப்பார்.

ஆனால், அதன்பிறகு? எல்லா அரசு அதிகாரிகளையும்போல் நாற்பது வருடம் சம்பளம் வாங்கி, ஓய்வு பெற்று பென்ஷனுக்காக் காத்திருக்கப் பிறந்தவரா அப்துல் கலாம்?

அந்த ஒரு தோல்வி, அப்துல் கலாமின் வாழ்க்கையை வேறொரு புதிய பாதைக்குத் திருப்பிவிட்டது. இந்திய ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி என்று பல துறைகளில் அற்புதமான பங்களிப்பைச் செய்து, குடியரசுத் தலைவராக உயர்ந்து எல்லோரின் இதயம் கவர்ந்த அவர், இன்னும் பல தலைமுறைகளுக்குக் குழந்தைகள், இளைஞர்களின் லட்சிய பிம்பமாகத் திகழப்போகிறார்.

சில சமயம், தோல்விகள்கூட, கசப்புச் சாயம் பூசிய சாக்லேட்கள்தான். அந்தக் கசப்புச் சுவை நீங்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தால், வெற்றி எனும் இனிப்பு நமக்குக் கிடைக்கும், அப்துல் கலாம்போல!


இந்தப் பதிவை ஆடியோ வடிவில் Youtube இல் கேட்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்



மேட்ச் எப்போ ஆரம்பிக்கும்?’, அந்தப் பையன் பொறுமையில்லாமல் கேட்டான்.

அக்கம்பக்கத்தில் இருந்த எல்லோரும், ஒரேமாதிரியாக உதட்டைப் பிதுக்கினார்கள். ஏன் இன்னும் போட்டி தொடங்கவில்லை என்பதற்கான காரணம், அவர்கள் யாருக்கும் தெரியவில்லை.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலை இந்நேரம் கிரிக்கெட் போட்டி ஜோராகச் சூடு பிடித்திருக்கும். ஆனால் இன்றைக்கு, யாரும் மைதானத்தில் களமிறங்கவில்லை. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். என்ன ஆச்சு?

சிறுவன் கபில் தேவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஒரே இடத்தில் உட்காரமுடியாமல், அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டிருந்தான். அடிக்கடி, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை ஆர்வத்தோடு எட்டிப்பார்த்தான் அவன்.

ம்ஹூம், எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்கள் எல்லோரும் கூடிக் கூடிப் பேசுகிறார்களேதவிர, மேட்ச் தொடங்குகிற வழியைக் காணோம்.

நேரம் போகப்போக, கபிலுக்கு எரிச்சல் அதிகமானது, பேசாமல் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடலாமா என்றுகூட நினைத்தான் அவன்.

சிறுவயதிலிருந்தே, அவன் அப்படித்தான். எதற்காகவும் காத்திருப்பது பிடிக்காது. ஓர் இடத்தில் நிற்காமல், அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேதான் இருப்பான்.

ஓடுவது என்றால், சும்மா விளையாட்டு இல்லை. சண்டிகரில் தொடங்கி, சில மைல் தூரம் இருக்கிற அம்பாலாவரை அதிவேகமாக ஓடுவான். பிறகு, அதே வேகத்தில் திரும்ப ஓடி வருவான்.

இத்தனைக்குப்பிறகும், அவன் முகத்தில் துளி களைப்பு தெரியாது. அடுத்து என்ன விளையாடலாம் என்றுதான் கண்கள் அங்கும் இங்கும் துறுதுறுப்பாக அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

சிறுவன் கபில், அம்மா செல்லம். ஏழு குழந்தைகளைப் பெற்ற அந்த அம்மையாருக்கு, கபில் தேவ் என்றால் உயிர். அவன் எதைக் கேட்டாலும் செய்து தருவதற்குத் தயாராக இருந்தார் அவர்.

ஆனால் கபில், மற்ற குழந்தைகளைப்போல அது வேண்டும், இது வேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிற ஜாதி இல்லை. ருசியான சாப்பாடு, நல்ல துணிமணிகள் என்று எதையும் அவன் எதிர்பார்ப்பதில்லை, கொடுப்பதைச் சாப்பிடுவான், கிடைப்பதை உடுத்திக்கொள்வான், அப்படியே வெளியில் விளையாட ஓடிவிடுவான்.

எந்நேரமும் தரையில் கால் படாமல் எதையாவது விளையாடிக் கொண்டிருக்கவேண்டும். அது ஒன்றுமட்டும் போதும் அவனுக்கு, வேறு எதுவுமே தேவையில்லை.

இப்படிச் சும்மா ரோட்டில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தவனை, பள்ளி ஆசிரியர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் என்று என்னென்னவோ போட்டிகளில் கலந்துகொண்டு மெடல்களை வாங்கிக் குவித்தான் கபில்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி, ஒரே ஒரு விளையாட்டின்மீதுதான் அவனுக்குத் தீவிரக் காதல்: கிரிக்கெட்!

இத்தனைக்கும், அவனுக்குக் கிரிக்கெட் விளையாடத் தெரியாது. ஆனால், அநேகமாக எல்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும், ரேடியோ வர்ணனைமூலம் மனக் கண்ணில் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தான். உள்ளூரில் எங்கே எந்தப் போட்டி நடந்தாலும் பார்வையாளர்கள் வரிசையில் முதலாவதாக உட்கார்ந்திருப்பான்.

கபில் தேவ் குடும்பம் வசித்த சண்டிகர் நகரம், பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவுகளை, ‘செக்டார்என்று அழைப்பார்கள், நம் ஊரில் தியாகராய நகர், தேனாம்பேட்டை என்பதுபோல், அங்கே செக்டார் 10’, ‘செக்டார் 24’ என்று ஒவ்வொரு பேட்டைக்கும் பெயர் வைத்திருந்தார்கள்.

இந்த செக்டார்கள் ஒவ்வொன்றிலும், ஒரு குட்டி கிரிக்கெட் டீம் இருக்கும். சனி, ஞாயிறுகளில் இந்த அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். வாரம்தோறும் நடைபெறும் இந்த செக்டார் போட்டிகள், சண்டிகரில் மிகப் பிரபலம்.

கபில் தேவ் தன்னுடைய செக்டார் 16’ அணி விளையாடும் போட்டி ஒன்றைக்கூடத் தவறவிடமாட்டான், தனக்கு விளையாடத் தெரியாவிட்டாலும், மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கை தட்டுவதில் அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

ஆனால் இன்றைக்கு, அந்த மகிழ்ச்சி கிடைக்காமலே போய்விடும் போலிருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் நடக்கும், ஜாலியாக ரசித்துப் பார்க்கலாம் என்று ஆவலாகக் கிளம்பிவந்தால், இங்கே மேட்சும் காணோம், ஒரு மண்ணாங்கட்டியும் காணோம்.

சிறுவன் கபிலுக்கு, பொறுமை போய்விட்டது. நேராக எழுந்து, ‘செக்டார் 16’ அணியின் வீரர்களை நெருங்கினான், ‘என்னாச்சு? ஏன் இன்னும் மேட்ச் ஆரம்பிக்கலை?’

அவர்கள் கபிலை மேலும் கீழும் பார்த்தார்கள், யார் இந்தப் பொடிப் பையன்?

கபிலும் அவர்களை தைரியமாக எதிர்கொண்டான், ‘இந்நேரம் மேட்ச் தொடங்கியிருக்கணுமே, ஏன் எல்லோரும் இப்படி முழிச்சுகிட்டிருக்கீங்க?’

அப்போதுதான், அவர்கள் விவரத்தைச் சொன்னார்கள். செக்டார் 16’ அணிக்காக விளையாடவேண்டிய ஒரு பையனைக் காணோம், அணியில் ஓர் ஆள் குறைவதால், மேட்ச் இன்னும் தொடங்கவில்லை.

இப்படிச் சொன்னபோது, அவர்களுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது, ‘தம்பி, உனக்கு கிரிக்கெட் ஆடத் தெரியுமா? நீ எங்க டீம்ல சேர்ந்து விளையாடுவியா?’

பதின்மூன்று வயதுச் சிறுவன் கபில் தேவ், பேந்தப் பேந்த விழித்தான். அவனுக்குக் கிரிக்கெட் விளையாட ஆசைதான். ஆனால் இதுவரை விளையாடியதில்லை. ஆகவே, அவர்கள் இப்படித் திடுதிப்பென்று கேட்டதும், அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

செக்டார் 16’ அணிக்கு வேறு வழி இல்லை, இதுவரை தலைகாட்டாத அந்த இன்னொரு பையனுக்காகக் காத்திருப்பதைவிட, இந்தக் கத்துக்குட்டிச் சிறுவனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

அதுதான், கபில் தேவின் முதல் கிரிக்கெட் அனுபவம். அதுவரை ஒரு ரசிகனாக மைதானத்தின் ஓரத்திலிருந்து கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தவன், இப்போதுதான் முதன்முறையாக ரத்தமும் சதையுமாக அதை உணர்ந்தான். அந்தப் பரவசம், அவன் வாழ்க்கைமுழுவதும் மறக்கமுடியாத ஓர் அனுபவமாக இருந்தது.

அந்த முதல் போட்டியில், கபில் தேவ் அப்படியொன்றும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை. ஆனால், அவன் தன்னால் இயன்றவரை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று போராடிய விதம், எல்லோருக்கும் பிடித்திருந்தது.

அதன்பிறகு, பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் கபிலை கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினார்கள், ‘கபில், உன்னிடம் ஒரு துடிப்பு இருக்கிறது, இயற்கையான திறமை இருக்கிறது, இதைச் சரியாகப் பட்டை தீட்டிப் பயன்படுத்திக்கொண்டால், கிரிக்கெட்டில் நீ இன்னும் பெரிய ஆளாக வரமுடியும்

அவர்கள் சொன்னதுபோலவே, அந்தத் துடிப்பும் கடின உழைப்பும், கபில் தேவ் நிகஞ்ச் என்கிற அந்தச் சிறுவனை, இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக உயர்த்தியது. அசாத்தியத் திறமையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம் பிடித்த கபில் தேவ், அடுத்தடுத்து பல உலகச் சாதனைகளை நிகழ்த்தினார்.

அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், 1983ம் ஆண்டு அவர் ஜெயித்துக் கொடுத்த உலகக் கோப்பைக்கு, இது வெள்ளி விழா ஆண்டு. இத்தனை வருடங்களில், எத்தனையோ கிரிக்கெட் பிரபலங்கள், திறமையாளர்கள் வந்தும்கூட, நாம் இன்னொரு உலகக் கோப்பையை ஜெயிக்கவே இல்லை என்பது, கபிலின் தனித்தன்மைக்கு ஒரு சாட்சி!

கடினமாக உழைப்பவர்களை, அதிர்ஷ்டம் நிச்சயமாகத் தேடி வரும். கபில் தேவ்போல், எதேச்சையாகக் கிடைக்கிற வாய்ப்பையும்கூட சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுகிற திறமைசாலிகளால், எதையும் சாதிக்கமுடியும்!


இந்தப் பதிவை ஆடியோ வடிவில் Youtube இல் கேட்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்




தொடரும்...

நன்றி - என். சொக்கன் மற்றும் முத்தாரம் இதழ்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

Friday, May 26, 2017

உங்கள் வாழ்க்கையில் உயிரோட்டம் உள்ளதா?



எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஒரு அர்த்தத்தைத் தேடுகிறோம், வெற்றியடைய ஆசைப்படுகிறோம். மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் எது எது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் விஷயங்கள் என்றாலும் எல்லோருடைய தேடலும் அவற்றை நோக்கியே இருக்கின்றன. என்றேனும் ஒரு நாளில் வெற்றியடைவோம், வாழ்வில் அர்த்தம் கண்டு பிடிப்போம், மகிழ்ச்சியடைவோம் என்ற எதிர்பார்ப்பில் தினசரி வாழ்க்கையைக் கோட்டை விடும் முட்டாள்தனம் பலரிடம் இருக்கிறது.

பலருடைய தினசரி வாழ்க்கை எந்திரத்தனமாக இருந்து விடுகிறது. என்றோ வாழப்போகும் நல்லதொரு வாழ்க்கைக்கான ஓட்டப்பந்தயமாக இருந்து விடுகிறது. வாழ்கின்ற வாழ்க்கை சரிதானா என்ற சந்தேகம் அடிக்கடி வர அடுத்தவர்களைப் பார்த்து அவ்வப்போது மாற்றிக் கொள்கிறதாகி விடுகிறது. இயற்கையான ஆரம்ப இலக்குகள் மாறி பணம், புகழ், படாடோபம் என்ற இலக்குகள் பெரும்பாலானவர்களின் இலக்குகளாகி விடுகின்றன. இந்த இலக்குகளில் மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் தேடும் போது பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.


உண்மையான மகிழ்ச்சி, அர்த்தம், வெற்றி இருக்கிறதா என்பதை அறிய ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கையைப் பார்ப்பது மிகச்சரியாக இருக்கும்.

# காலத்தை மறந்து, செய்கின்ற வேலையில் ஐக்கியமாவது உண்டா?

# பெரிய செலவில்லாமல் ரசிக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் உண்டா?

# அடுத்தவர் பார்வைக்கு எப்படி இருக்கிறது என்று கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகவே ஈடுபடும் விஷயங்கள் உண்டா?

# பெரும்பாலான நாட்களில் உற்சாகமாக எதிர்பார்க்கவும், செய்யவும் ஏதாவது புதுப்புது முயற்சிகள் உண்டா?

இதில் ஓரிரண்டு கேள்விகளுக்காவது பதில் ஆம் என்று இருந்தால் உங்கள் வாழ்க்கை உயிரோட்டம் உள்ள வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை அர்த்தத்தோடும், மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள். அதற்கு எதிர்மாறாக உங்கள் தினசரி வாழ்க்கை இருந்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மையான உயிரோட்டம் இல்லை என்று பொருள்.


# கேளிக்கைகளில் ஈடுபட்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கிறதா?

# தினசரி குடித்தால் தான் நிம்மதி கிடைக்கிறதா?

# அடுத்தவர்களைப் பற்றி வம்பு பேசி தான் பொழுது போகிறதா?

# அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து மிஞ்ச முனைவதில் தான் தினமும் அதிக நாட்டம் செல்கிறதா?

# பொருளாதார இலாபம் இல்லா விட்டால் உங்களுக்கு மிக ஆர்வமுள்ளவற்றில் கூட கவனம் செலுத்த மறுக்கிறீர்களா?

இதில் சிலவற்றிற்கு பதில் “ஆம்” என்றால் உங்கள் வாழ்க்கையில் ஓட்டம் இருக்கலாம், ஆனால் உயிர் இல்லை என்று பொருள்.


உயிரோட்டமுள்ள வாழ்க்கைக்கு சில உதாரணங்கள் பார்ப்போம்.

எடிசன், ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளில் மூழ்கி விடும் போது உலகத்தையே மறந்து விடுவார்களாம். கொண்டு வந்து வைக்கப்படும் உணவை உண்ணக் கூட மறந்து விடுவது சகஜமாம்.

லியார்னாடோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற ஓவிய மேதைகளும் அப்படியே தங்கள் படைப்பில் மூழ்கி விடுவார்களாம்.
அப்படியே தான் எல்லாத் துறை மேதைகளையும் சொல்லலாம். அந்த நேரங்களில் செய்யும் வேலையின் சிரமங்களோ, வரப் போகும் லாபங்களோ, கிடைக்கப் போகும் புகழோ அவர்கள் கவனத்தில் இல்லை. அந்தத் தருணங்கள் மிக அழகானவை. உயிரோட்டமுள்ளவை. செய்யும் செயல் முழுமை பெறப் பெற அவர்கள் அடையும் சந்தோஷம் வார்த்தைகளில் அடங்காதது. அதே நேரத்தில் அது அர்த்தமுள்ளதாகவும் அமைந்து வெற்றியையும் அளித்து விடுகிறது. அந்த அளவு தனித்திறமை இல்லா விட்டாலும் எத்தனையோ பேர் தங்கள் இயல்புக்கு ஏற்ப உயிரோட்டமான உபயோகமான வாழ்க்கை வாழ்வதை நாம் பல இடங்களிலும் பார்க்கலாம்.

மனதுக்குப் பிடித்ததே வேலையாகவோ, தொழிலாகவோ அமையும் பாக்கியம் ஒருசிலருக்கே வாய்க்கிறது. பலருக்கு அப்படி அமைவதில்லை. அமைகின்ற வேலை உற்சாகமாக இல்லாத போது பொழுது போக்கு ஒன்றையாவது உற்சாகமாகவோ, உபயோகமாகவோ வைத்துக் கொள்வது மிக புத்திசாலித்தனமான அணுகுமுறை. வருமானத்திற்கு ஒரு தொழிலும், மனதிற்கு பிடித்ததாய் ஒரு நல்ல பொழுது போக்கும் அமைத்துக் கொண்டு உயிரோட்டம் உள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சிறிய அரசாங்க வேலையில் இருக்கிறார். அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை உடையவர். அவர் இது வரை ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுள்ளார். அப்படி நடும் போதும் அதைப் பற்றி பேசும் போதும் அவர் முகத்தில் பொங்கும் பெருமிதம் பார்க்கவே அலாதியாக இருக்கும். இப்படி சிலர் சமூக சேவை எதிலாவது முழு மனதுடன் ஈடுபட்டு உயிரோட்டமாய் வாழ்க்கையை வைத்துக் கொள்கிறார்கள்.

வேலைக்குப் போகாத ஒரு குடும்பத் தலைவி தோட்ட வேலைகளில் மிகவும் ஈடுபாடுடையவர். நடும் செடிகளில் தளிர்க்கும் ஒவ்வொரு இலையிலும், பூக்கும் ஒவ்வொரு பூவிலும் ஆனந்தம் காணும் தன்மை அவரிடம் உண்டு.  இன்னொரு மனிதர் புத்தகப்பிரியர். புத்தகம் ஒன்று கிடைத்து விட்டால் உலகையே மறந்து அதில் ஆழ்ந்து விடுவார். அவருடைய வேலை எந்திரத்தனமாக அமைந்திருந்தாலும் பிடித்த புத்தகங்களை படித்து வாழ்க்கையில் உற்சாகம் குன்றாமல் அவர் பார்த்துக் கொள்கிறார். இப்படி பலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிடித்த ஒன்றில் ஆர்வமாக ஈடுபட்டு வாழ்க்கை எந்திரத்தனமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சாதனை புரியவோ, சரித்திரம் படைக்கவோ முடியா விட்டாலும் வாழ்க்கை உயிரோட்டமாக இருக்கும்படி இப்படிப் பட்டவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

இப்படி உயிரோட்டமான வாழ்க்கை வாழ்பவர்கள் பெரும்பாலும் உபயோகமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அப்படி இல்லா விட்டாலும் கூட மற்றவர்களுக்கு உபத்திரவமாக என்றும் மாறுவதில்லை. தங்கள் வாழ்க்கையில் தங்கள் வழியில் நிறைவு காண்பவர்கள் அடுத்தவர்கள் வாழ்க்கையில் அனாவசியமாகக் குறுக்கிடுவதில்லை. அடுத்தவர்களை நோகடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும், துக்கங்களையும் சமாளித்து சீக்கிரமே மீண்டும் விடுகிறார்கள்.

அப்படி உயிரோட்டமில்லாத வாழ்க்கை வாழ்பவர்களோ அதிகமாக அடுத்தவர்களைப் பார்த்தே வாழ்கிறார்கள். பொருளாதார நிலையே மிக முக்கியம் என்று நம்பி சம்பாதிக்கும் முனைப்பில் தனிப்பட்ட இயல்பான திறமைகளையும், ஆர்வங்களையும் பலி கொடுத்து விடுகிறார்கள். பணம், பொருள், சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டே போகும் அவர்கள் வாழ்வில் முன்பு சொன்னது போல ஓட்டம் இருக்கிறது. உயிர் இருப்பதில்லை. ஒரு வெறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெறுமையை நிரப்ப சிலர் போதையை நாடுகிறார்கள், சிலர் கேளிக்கைகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள், சிலர் பதவி அதிகாரம் தேடி அடைகிறார்கள். வெளிப்பார்வைக்கு அந்த வாழ்க்கை வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும்  தோன்றினாலும், நிரப்ப முடியாத வெறுமையாகவே அப்படிப்பட்ட வாழ்க்கை இருந்து விடுவது தான் சோகம்.

எனவே உங்கள் வாழ்க்கையில் உயிரோட்டம் உள்ளதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். மாற்றம் தேவையானால் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்தவர் பார்வைக்கு வெற்றிகரமான வாழ்க்கையாய் தெரிந்து உள்ளுக்குள் வெறுமையை உணரும் வாழ்க்கையாக இருக்கும் அவலம் மட்டும் வேண்டவே வேண்டாம்.

நன்றி - என்.கணேசன்


நாம் அன்பாக இருந்தால் செல்லப்பிராணிகளிடமிருந்தும் சகமனிதர்களிடமிருந்தும் ஆற்றலை பெறமுடியும்.

# நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.


இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb


"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT


"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ


"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்"
Telegram குழுவின் முகவரி https://telegram.me/LetUsThinkPositive


"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"
Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor


இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

Saturday, September 28, 2013

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)

இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.


சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. 

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.


இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும். 

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.     

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.   

மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.   

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.  

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.  


1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.

மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.    


(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

ஆர்க்கிமிடிஸ் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.  

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.    

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:

நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...

என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும்.     

(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)